ஜங்கமசமுத்திரம் ஏரி நிரம்பியுள்ளதை ஆட்சியர் கார்மேகம் அவர்கள் செய்தியாளர்கள் பயணத்தில் நேரில் பார்வை
மாவட்ட ஆட்சித்தலைவர் கார்மேகம், அவர்கள் செய்தியாளர் பயணம் மேற்கொண்டு தகவல்.
வடகிழக்கு பருவ மழை தமிழகம் முழுவதும் பரவலாக பெய்து வரும் சூழ்நிலையில் சேலம் மாவட்டத்திலும் தற்பொழுது பெறப்பட்டுள்ள மழையினால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் காவிரி டெல்டா பகுதிகளில் உள்ள விவசாய பெருமக்கள் குறுவை சாகுபடி செய்ய ஏதுவாக கடந்த 12.06.2021 அன்று மேட்டூர் அணையினை திறந்து வைத்தார்கள்.
மேட்டூர் அணை வரலாற்றில் 41 வது முறையாக தற்பொழுது மேட்டூர் அணை தனது முழு கொள்ளளவான 120 அடியை எட்டியுள்ளது. அதேபோன்று தற்பொழுது மேட்டூர் அணையிலிருந்து 44 வது முறையாக உபரி நீர்வெளியேற்றப் படுகிறது.
குறிப்பாக சேலம் மாவட்டத்திற்கு கிடைக்க வேண்டிய தென்மேற்கு பருவ மழை சராசரியாக 440.60 மி.மீ ஆகும். தற்பொழுது 540.54 மி.மீ மழை கிடைக்கப்பெற்றுள்ளது. இது தென்மேற்கு பருவமழையில் கிடைக்க வேண்டிய சராசரி மழை அளவை விட 100 மி.மீ அளவு அதிகமாகும்.
சேலம் மாவட்டத்திற்கு கிடைக்க வேண்டிய வடகிழக்கு பருவமழை (அக்டோபர், நவம்பர் மற்றும் டிசம்பர்) 370.50 மி.மீ ஆகும். இதில் 13.11.2021 வரை 360.03 மி.மீ மழை அளவு பெறப்பட்டுள்ளது.
இதனால் சேலம் மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான நீர்நிலைகள் முழு கொள்ளளவை எட்டியுள்ளன. மீதமுள்ள நீர்நிலைக ளும் நிரம்பும் நிலையில் உள்ளன.
சேலம் மாவட்டத்தில் மாநகராட்சி பகுதியில் 3 நீர்நிலைகளும், ஊராட்சிகளின் கட்டுப்பாட்டில் 276 நீர்நிலைகளும், பேரூராட்சிகளின் கட்டுப்பாட்டில் 44 நீர்நிலைகளும், பொதுப்பணித்துறை (மேட்டூர் அணைக் கோட்டம்) கட்டுப்பாட்டில் 18 நீர்நிலைகளும், பொதுப்பணித்துறை சரபங்கா கட்டுப்பாட்டில் 89 நீர்நிலைகளும் என மொத்தம் 430 நீர்நிலைகள் உள்ளன.
இவற்றில் தற்போது வரை 60 நீர்நிலைகள் முழுமையாக நிரம்பியுள்ளது. 49 நீர் நிலைகள் 75 சதவீதமும், 35 நீர்நிலைகள் 50 சதவீதமும் நிரம்பியுள்ளது. மேலும் தொடர்ச்சியாக பெய்துவரும் பருவ மழையையொட்டி மாவட்டத்தில் மீதமுள்ள நீர்நிலைகளின் நீர்மட்டமும் வெகுவாக உயர்ந்து வருகின்றது.
நடப்பு ஆண்டில் சேலம் மாவட்டத்தில் தற்போது வரை 1,80,133 எக்டர் பரப்பளவில் நெல், கரும்பு, பருத்தி, சிறுதானியங்கள், பயிறு வகைகள், எண்ணெய் வித்துக்கள் உள்ளிட்ட வேளாண் பயிர்கள் சாகுபடி செய்யப்பட்டுள்ளது.
இதுதவிர தோட்டக்கலை துறையின் சார்பில் பழங்கள், காய்கறிகள், வாசனை திரவியங்கள், மலை பயிர்கள் என 60,949 எக்டர் பரப்பளவில் சாகுபடி செய்யப்பட்டுள்ளது.
தற்போது பெய்துவரும் பருவ மழையால் சேலம் மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான ஏரிகள், குளங்கள் நிரம்பி உள்ளது. இதனால் இந்த ஆண்டு பயிர் சாகுபடி விளைச்சல் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் நிலத்தடி நீர்மட்டம் உயர வாய்ப்பாக அமைந்துள்ளதால் கோடைகாலங்களில் சேலம் மாவட்டத்தின் நீர் தேவையை பூர்த்தி செய்திட தற்பொழுது பெய்துவரும் பருவமழை பேருதவியாக அமைந்துள்ளது.
இவ்வாறு மாவட்ட ஆட்சித்தலைவர் கார்மேகம், அவர்கள் செய்தியாளர் களிடம் தெரிவித்தார்.
இந்த ஆய்வின் போது ஆத்தூர் வருவாய் கோட்டாட்சியர் சரண்யா, இணை இயக்குநர் (வேளாண்மை) கணேசன் உள்ளிட்ட தொடர்புடைய அலுவலர்கள் உள்ளனர்.
Comments
Post a Comment