இந்திய வரலாற்றின் முக்கிய காதல் கதையான ஜோதா அக்பரும் இந்து மதமும்
இந்தியாவை பல மன்னர்கள் ஆண்டிருந்தாலும் அதில் ஒருசில மன்னர்களின் பெயர் மட்டுமே வரலாற்றில் நிலைபெற்று இருக்கிறது. இந்தியாவை ஆண்ட மன்னர்களில் முகலாய மன்னர்களுக்கு என்று பல தனிச்சிறப்புக்களும், வரலாறும் உள்ளது. முகலாய சாம்ராஜ்ஜியம் பேரரசர் அக்பரின் காலத்தில்தான் முழு எழுச்சி பெறத்தொடங்கியது.
வரலாற்றில் அக்பர் அழியாப்புகழ் பெற அவரின் வீரமும், அரசியல் நடவடிக்கைகள் மட்டும் காரணமல்ல அவரின் தனிப்பட்ட வாழ்க்கையும் தான். முகலாய அரசர்களில் இருந்து இந்து இளவரசி ஜோதாவை திருமணம் செய்த முதல் அரசர் இவர்தான். இவர்கள் இருவருக்கும் இடையே காதல் இந்திய வரலாற்றில் மிகவும் முக்கியமானதாகும்.
ஜோதா பாய்தான் பேரரசர் அக்பருக்கு மிகவும் பிடித்த ராணியாக இருந்தார். ஜோதா பாய் அக்பரின் இதயத்தில் மிகவும் முக்கியமான இடத்தில் இருந்தார் அதன் விளைவாக முகலாயர்களின் அரண்மனையிலும், அரசவையிலும் உயர்ந்த இடத்தை வகித்தார். ஹீரா கன்வார் என்று பெயரிடப்பட்ட ஜோதா பாய் ஒரு இந்து இளவரசி மற்றும் அமீரின் ராஜ்புத் மன்னர் ராஜா பார்மலின் மகள். அக்பரின் அரண்மனையில் நீண்ட காலம் வாழ்ந்த அவர், தனது 80 வது வயதில் 1622 இல் இறந்தார்.
முகலாய அரசவை
முகலாய அரசவையில் ஜோதா பாய்க்கு மரியம்-உஸ்-ஜமானி என்ற தலைப்பு வழங்கப்பட்டது. அக்பருக்கு பிறகு முகலாய அரியாசனத்தில் அமர்ந்த வாரிசை பெற்றுத்தந்ததும் இவர்தான். முகலாயர்களின் அரசவையில் ஜோதாவிற்கு அதிக செல்வாக்கு இருந்தது, எந்த முடிவையும் எடுக்கும் அதிகாரம் அவருக்கு வழங்கப்பட்டிருந்தது. அக்பருக்கு அடுத்த நிலையில் இவர்தான் இருந்தார், அக்பர் சார்பில் அரசக்கட்டளைகளை விதிக்கும் அளவிற்கு இவருக்கு அதிகாரம் வழங்கப்பட்டிருந்தது.
ஜோதாவின் மதம்
முஸ்லீம் பேரரசரை மணந்த பின்னரும் ஜோதா இந்து மதத்தை பின்பற்றி வாழ்ந்தார். ஜோதா கிருஷ்ணரின் மீது அளவற்ற பக்தி கொண்டவராக இருந்தார், மேலும் அக்பர் அவருக்கு கிருஷ்ணரை வழிபட முழு சுதந்திரம் அளித்திருந்தார். முகலாய அரண்மனையில் அலங்கரிக்கப்பட்ட கிருஷ்ணர் கோவில் ஒன்று ஜோதா பாய் வணங்குவதற்காக கட்டப்பட்டது
ஜோதா-அக்பர் புரிதல்
ஜோதா பாயின் அறிவுரைகளும், செயல்களும் அக்பருக்கு இந்து மதத்தின் மீது ஈர்ப்பை ஏற்படுத்தியது. இந்து மதம் குறித்த பல தகவல்களை ஜோதாவிடம் இருந்து அக்பர் கற்றுக்கொண்டார். ஜோதா பாய் கிருஷ்ணர் மீதான தனது பக்தியை வாழ்நாள் முழுவதும் கடைபிடித்திருந் தாலும், அவரும் நாடு முழுவதும் பல மசூதிகளை கட்டுவதற்கு பெரும் பணத்தை செலவிட்டார். ஜோதாவும், அக்பரும் வெவேறு மதத்தை சேர்ந்தவராக இருந்தாலும் தங்கள் மதத்தை மற்றவர் மீது திணிக்காமல் மற்ற மதத்தையும் மதித்து வாழ்ந்தார்கள்.
ஜோதாவின் மரணம்
அக்பர் இறந்த பிறகும் 20 ஆண்டுகள் வாழ்ந்த ஜோதா பாய் 1622 ஆம் ஆண்டில் தனது 80 வயதில் இறந்தார். அவர் ஒரு இந்துவாகப் பிறந்து கிருஷ்ணரை வாழ்நாள் முழுவதும் வழிபட்ட போதிலும், அவரது மரணத் திற்கு பின்னர், அவர் இந்து மரபுப்படி தகனம் செய்யப்படவில்லை.
அதற்கு பதிலாக, அவர் இஸ்லாமிய நடைமுறையின் படி அடக்கம் செய்யப்பட்டார்.
மேலும் அவரது மரணத்திற்கு பிறகு அவரது நினைவாக ஒரு கல்லறை நினைவுச்சின்னமாக எழுப்பப்பட்டது.
ஜோதாவின் மகன்
அவரது மகன் சலீமுக்கு அவர் அளித்த விவரக்குறிப்புகளின்படி இந்த கல்லறை கட்டப்பட்டது, பின்னர் அவர் ஜஹாங்கிர் என்று அழைக்கப்பட்டார். ஜஹாங்கீர் நிலத்திற்கு அடியில் இருக்கும் கல்லறைக்கு செல்லும்படி மாடிப்படிகளுடன் கல்லறையை கட்ட ஏற்பாடு செய்தார். அக்பரின் கல்லறைக்கு மிக அருகில் இந்த கல்லறை கட்டப்பட்டது.
காலப்போக்கில், அவரது கல்லறை பாழடைந்த நிலையில் இருந்தது, இது இந்திய தொல்பொருள் ஆய்வு மையத்தால் சரிசெய்யப்பட்டது
ஜோதாவின் கல்லறை
ஜோதா பாயிற்காக கட்டப்பட்ட கல்லறை மிகவும் சுவாரஸ்யமானது. நுழைவாயிலில் உள்ள கல்வெட்டு இது அக்பரை மணந்து பின்னர் ஜஹாங்கிரைப் பெற்றெடுத்த அமீரின் இளவரசி மரியம் உஸ் ஜமானிக்கு சொந்தமானது என்று கூறுகிறது. முகலாயர்களால் கட்டப்பட்ட மற்ற வகையான கட்டமைப்புகளுக்கு முற்றிலும் மாறுபட்ட வகையில், இந்த கட்டிடம் முன் மற்றும் பின் பக்கங்களில் இருந்து ஒரே மாதிரியாக இருக்கிறது. இவ்வாறு, ஒரு ராஜ்புத்திர இளவரசியாகப் பிறந்த ஜோதா பாய், முகலாய சிம்மாசனத்தில் நீண்ட காலம் அமர்ந்த அக்பரின் பேரரசி என்ற புகழைப் பெற்றார்.
அக்பர் சிறுவயதில் ராஜபுத்திரர்களுடன் கொண்ட நட்பு அவரை ஜோதாபாய் என்ற ராஜபுத்திர இந்து பெண்ணை திருமணம் செய்யத் தூண்டியது
இப்போது அவரங்கசீப்பின் கொள்ளுப்பாட்டி இந்து,இந்தியர், ராஜபுத்திரர்
அவரங்கசீப் இந்து முஸ்லீம் கலப்பு இரத்தத்தின் வழித்தோன்றல்..
கொள்கையால் இசுலாமியர். ஆனால், அவர் இந்தியரே...
ராஜபுத்திர முகலாயர்களின் நல்லுறவின் அடையாளச் சின்னமே ஷாஜஹான்,அவுரங்கசீப் அனைவருமே
இதற்கு நேரெதிர் துருவம் சிவாஜி.
ஆதில் ஷா படையில் முக்கிய பொறுப்பில் இருந்த இந்து படைவீரன்
குழந்தையில்லாமல் மன உளைச்சலுக்கு ஆளாகிறார்.
ஆதில்ஷா, ஒரு குறிப்பிட்ட தர்காவில் ஒரு மண்டலம் கணவனும் மனைவியும் தங்கி தான தர்மங்கள் செய்து வேண்டினால் நல்லது நடக்கும் என்று பரிந்துரைக்க அதன்படி செய்து அவர் அவ்வாறு வேண்டியதன் பலனாக குழந்தை பிறக்கிறது. அக்குழந்தைக்கு அந்த தர்காவில் அடக்கப்பட்ட இசுலாமிய துறவியின் பெயரையே சூட்டுகிறான் அந்த இந்து மராட்டிய படைவீரர்.
அந்த இசுலாமிய பெயர் தாங்கிய குழந்தைதான் சத்திரபதி சிவாஜியின் தந்தை ஷா ஹாஜி.
இப்படி அவரங்கசீபின் முன்னோர்களும்சிவாஜியின் முன்னோர்களும் மதங்களை கடந்து நட்புறவை மதித்து நல்லறத்தை பேணி வாழ்ந்த வரலாறுகளை விட்டுச் சென்றுள்ளனர்.
ஆனால், இன்று சிவாஜியை இசுலாமியர்களின் எதிரியாகவும்,
அவரங்க சீபை இந்துக்களின் எதிரியாகவும், சித்தரித்து அரசியல் செய்யும் கேவலமான மதவெறி பிடித்த மிருகங்கள்-நம் தேசத்தின் மாண்பையும் நல்லிணக்கத்தையும் குதறிப் புசித்துக் கொண்டிருக்கின்றன.
ஒரு தலைமுறையின் வாழ்வியலையே நாசமாக்கும், இந்த நீசச்செயலை எதிர்த்து இங்கு ஒரு சிலர் மட்டுமே தொண்டை வற்ற கத்திக்கொண்டிருக்கின்றனர்.
பெரும்பாலும் மவுனமாக கடந்து போகும் பலருக்கும் மதம்பிடித்திருப்பதை அவர்கள் அறியாதிருக்கின்றனர்.
Comments
Post a Comment